வாட்ஸ் அப் குரூப் குறுங்கதை.
அப்போதுதான் அந்த குழுவில் சேர்ந்தான் இரவி.அந்த குழுவிற்கு 'எங்கள் குடும்பம்' என பெயரிட்டிருந்தார்கள்.குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அதில் இணைய அனுமதிக்கப்பட்டார்கள்.நிறைய பெண்களும் குறைவான ஆண்களும் அதில் இணைந்திருந்தார்கள்.அந்த ஆண்கள் குழுவில் கூட அப்பெண்களை பாதுகாத்துக்கொண்டிருந்தார்கள்.
தினந்தோறும் காலையில் வணக்க புகைப்படங்கள் வந்துகொண்டே இருந்தது இரவிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.இதற்கு தீவிர முடிவு கட்ட எண்ணி களத்தில் தானே குதித்தான்.
இரவி:காலை வணக்கம்,
இரவி:இனிய காலை வணக்கங்கள்,
இரவி:நட்பூ வணக்கம்,
இரவி:இனிய உதயமாகின்ற இந்த காலை நம் வாழ்வில் நலம் சேர்க்கட்டும் கூடவே ரோசாப்பூ படம்.
இவ்வாறாக தன்னை குழுவுடன் இணைத்துக்கொண்டு தன் கோவத்தை மாற்றிவிட்டான் கில்லாடி இரவி.இவனின் இந்த தீவிரத்தை புரிந்துகொண்ட சகாக்கள் தங்களின் நிலையை கொஞ்சமாய் மாற்றிக்கொண்டு மாலை வணக்கத்திற்கு சென்று விட்டார்கள்.ஆனால் இரவி மாலையில் என்ன நடக்கிறது என்பதை பெரும்பாலும் பார்ப்பதில்லை.காரணம் அவனுக்கு பெரும் குடி பழக்கமும் குறைவான வேகமுள்ள இணையமும் இருந்தது.அதனால் அங்கே சமநிலை தவறியது. பதிவிறக்கம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாய் இருந்தது.எல்லாமே பூக்கள்,குழந்தைகள் மற்றும் தெய்வங்களை கொண்டு செய்யப்பட்ட வணக்க புகைப்படங்கள்.
இப்போதெல்லாம் யாரும் காலை வணக்கங்கள் சொல்வதில்லை என்பதாலும் இவனின் வணக்கங்களுக்கும் எதிர்வினை இல்லை என்பதாலும் அந்த குழுவின் மீதான அவனின் ஆர்வம் குறைந்துவிட்டது.
குடியை கொஞ்சம் அதிகப்படுத்தி விட்டிருந்தான்.மேலும் தற்சமயம் "பத்து மணி குத்த ரெடி " என்னும் புதுகுழுவில் இணைந்து கொண்டான்.தனது இணைய வேகத்தையும் அதிகரித்துக்கொண்டு,அதை குடியின் வேகத்திற்கு இணையாக மாற்றிக்கொண்டான்.இந்த புது குழுவில் எல்லாமே காணொளிப்பதிவு தான்.சலைக்காமல் வந்துகொண்டு இருந்தன ஆண்பெண் இணைந்திருக்கும், பிணைத்திருக்கும், அல்லது கள்ளத்தனமாய் எடுக்கப்பட்ட,தெரிந்தே எடுக்கப்பட்ட, குறைந்த ஒளியிலான, எதார்த்தமான காணொளிகள்.முக்கியமாய் அந்த ஒரு காணொளி அவனை மிகவும் வசியப்படுத்தியது. அதில் வரும் பெண் கிட்டத்தட்ட இவனின் பெண் தோழியை ஒத்திருந்தாள். மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருந்த அவன் தன்நிலை மறந்து, அவளுக்கு அதை அனுப்பலாமா? என யோசிக்கும் நொடியில் அனுப்பியே விட்டிருந்தான்.கடும் போதை என்பதால் அன்று அவளிடமிருந்து என்ன பதில் வந்தது என்பதையும் பார்க்க வில்லை. நன்றாக தூங்கி விட்டிருந்தான்.
காலையில் துயில் எழுந்து கைபேசியை பார்க்கையில் தான் தெரிந்தது அந்த குடும்ப குழு நிர்வாக உறுப்பினர் இவனுக்கு ஒரு ஏழு முறை அழைத்தது.
அன்று தாங்கள் தங்கள் பெண்களை பாதுகாக்க தவறிவிட்டதை எண்ணி எங்கள் குடும்ப ஆண்கள் கதறினார்கள். அப்போதிருந்து இரவி தன் குடும்ப நிகழ்விற்கு செல்வதில்லை
Comments
Post a Comment